Saturday 1 August, 2020

மறைந்த சங்க தலைவர் திரு.ஜோசப் பெஸ்க்கி அவர்களின் புகழ் அஞ்சலி கூட்டம்







கன்றினை இழந்த
தாய் பசுவின் மனநிலையில்

கணவனை இழந்த
மனைவியின் பேதளிப்பில்

அலைகடலில்..கடும் புயலின்..
கோர தத்தளிப்பில்.....

இங்கே
நண்பர்களும் உறவுகளும்.


ஆறாத சோகம் தான்
அன்னாரின் இழப்பு....
அவர் 
சேர்த்து வைத்த
செல்வங்களாய் 
இங்கே
எத்துனை வகையான 
மனிதச் செல்வ
குவியல்கள்!



‌நகர் மக்கள் வளர்ச்சிக்கு
நல் வித்திட்ட சேவகன்.

கொண்ட பற்றாலும்
பெற்ற பதவியினாலும்
நகரின் மேம்பாட்டிற்கு
அடித்தள மிட்ட செம்மல்.


பொதுச்சேவைகள் செய்தே
நகரின்
புகழாரம் பெற்ற
புண்ணியவான்.

சங்கத் தலைவராக
நெடுங்காலம்
நம்மை ஆண்டவர்.

இந்த
நகரையும் நன்கு
ஆண்டவர்.


இவரது சாணக்கிய தனத்திற்கான
வெற்றி தான்
நகரெங்குமான
சிமெண்ட் சாலைகள்.


பெருக்கத்து வேண்டும் பணிதல்
என்ற
வள்ளுவரின் வார்த்தைக்கேற்ப
அனைவரையும்
மதிக்கும்
கைதேர்ந்த பண்பாளர்.


நகரின் நலம் காக்க
நாளெல்லாம் உழைத்தவர் 
நல்ல பல திட்டங்களுக்கு
அடிக்கோல் நாட்டியவர்.

வெள்ளப்பெருக்கு காலங்களில்
தொண்டர் படை திரட்டியவர்.

பசியென்று வந்தவருக்கு 
புசி என்று பொருளிட்டவர்


வீதிகளை செப்பனிட
பல வாதி களை சந்தித்தவர்.

சிதறிக் கிடக்கும் மக்களை
ஒன்றாக திரட்டும்
சாத்திரம் தெரிந்தவர்.

புதிது புதிதாக சிந்தித்து
நகரின்
வளர்ச்சிக்கு வித்திட்டவர்.

காந்த சிரிப்பை காட்டி
மக்களை
கட்டிப் போட்ட பேச்சாளர்.

மக்கள் மனதில் நிற்கும் 
நல்ல
மந்திரம் தெரிந்தவர்.


மாணவர்கள் வாழ்க்கையில்
நம்பிக்கை
விளக்கொளி ஏற்றியவர்.

எதிலும்
புதுமையைப் புகுத்தி
சமதர்மம் கண்டவர்.

அனைவரையும்
அரவணைக்கும் சமத்துவ
குணம் கொண்டவர்.

இதோ...இங்கே...
சிறுவர் பூங்கா மலர
பெரும் முயற்சிக்கு
உரம் போட்டவர்.


இளைஞர் அணி,
மகளிர் அணி,
மாணவ அணி என
பல அணிகளுக்கு
தலைமை வகித்தவர்.


இப்படி இவரின்
சாதனைகளை அடுக்கிக்கொண்டே
போகலாம். 

நம்
ஜோசப் பெஸ்கியை
நகரின் ஒரு 
சரித்திரமாய் கூடபார்க்கலாம்.



வையத்துள் நிலைத்து வாழ்வார் 
அவர்.

நல்ல மனிதர் என்ற
அடையாளம் தரித்துக் கொண்டு.


செயற்கரிய செய்வார் பெரியர்.

ஆம்.. 
அதற்கும் உதாரணமாக
உலா வந்தவர்.... 

இவர்.
கலை நிகழ்ச்சிகளில் எல்லாம்
இவர் தான்
கதாநாயகன்.


ஏதோ பிறந்தோம்...
எப்படியோ வாழ்ந்தோம்.. 
என்றில்லாமல்
பிறருக்காக வாழ்ந்தவர்..

தன்னால் இயன்றதை செய்து
நகரில்
நல்ல பேரையும்.. 
கூடவே
நல்ல மனிதர்களையும்
சம்பாதித்தவர்.



தாகம் யாருடைய தாயினும்
அதை தீர்ப்பது தான்
தண்ணீரின் தன்மை.

பிறப்பும் இறப்பும் அப்படியே.
அதனதன் வழியில்
அதனதன் நிலையில்.


குறைந்தே வாழ்ந்தாலும்
நிறைவாய் வாழ்ந்த 
தலைவரின் 
ஆன்மா 
சாந்தியடையட்டும்...


நம் சங்கடங்கள் தீர்க்க
அவரே 
நமக்கு துணையாய் இருந்து
நல்ஆசி வழங்கட்டும்.
நம்மை
நல்வழி நடத்தட்டும்.
வாழ்க அன்னாரின் புகழ்.


குரு வைத்தியநாதன்.

மண்ணிவாக்கம்.


**************

இரங்கல் கவிதை
   """"""""""""""""""""""""""""""""""
தவிர்க்க இயலா தலைமையே!

உம்மை வணங்கி எமது இரங்கல் கவிதையை வடிக்கின்றேன்.

அன்புக்கு அடித்தளமாய்,

 பண்புக்கு பக்குவமாய்,
 
அறிவுக்கு ஆசிரியனாய்,

 ஆற்றலுக்கு ஆளுமையால்,
 எமது இதயத்தை தொட்டாயே! 

இதய நோய் வந்தா இறந்து போனாய்?

 தமிழுக்கு இலக்கணம் தந்தார் இத்தாலிய ஜோசப் பெஸ்கி

 நட்புக்கு இலக்கணம் தந்தாய்  இங்கிருந்த ஜோசப் பெஸ்கி

 பக்குவமாய் உரையாடும் பண்புகளை வளர்த்தாயே! *

வார்த்தை ஜாலங்களால் வரலாறு படைத்தாயே! 

பொது நிகழ்ச்சிகளில் உமது  சிறப்புரை கண்டு சிலிர்த்துப் போனவர்களில் நானும் ஒருவன்!

 மதம் கடந்து   மனிதம் பேசும் மாமனிதன் நீ ! 

கேவலம் மாரடைப்பா உன்னை மரணிக்க வைத்தது!

 தத்துவ தலைமையே!
 நீ இந்த மண்ணை விட்டு மறைந்தாலும்,

 எம்மை விட்டு மறையாமல் வாழ்ந்து கொண்டிருப்பாய் வரலாற்றில்!

     தோழமையுடன்                   
      ஆர்.கோட்டீஸ்வரன்